top of page
Search
  • Writer's pictureSwetha Sundaram

கோதையின் கீதை


உருக்கிய தங்கத்தையும் , பவழத்தையும் கொண்டு வர்ணம் பூசியத்தைப் போல் வானம் காட்சி அளித்தது. வானம் ஒரு தங்க நிற ஏரிப் போல இருந்தது. மேகங்கள், அந்தத் தங்க ஏரியில் பூத்திருந்த தாமரை புஷ்பங்கள் போலக் காட்சியளித்தன. அந்த சாயங்கால வேளையில், அல்லி மலர்களும் , மல்லிகை பூக்களும் மலர்ந்து தங்கள் நறுமணத்தினால் குயில்களைத் தங்கள் கூட்டுக்கு வரப்பேற்பதாக தோன்றியது. வீடுகளில் ஏற்றப்பட்ட விளக்கொளி, அந்த மாலை பொழுதை மனோகரமாவும் , இனிமையாவும் ஆக்கியது . ஆனால் அந்த மாலை பொழுதின் அழகை ராதா ரசிக்கவில்லை. அவள் மனதில் வேதனை கொதித்து கொண்டு இருந்தது. அஸ்தமிக்கும் சூரியனின் ஒளி கதிர்கள், அவள் மனதை இன்னும் கொதிக்க செய்தது. தன்னையே அறியாமல், அவள் ஜன்னல்களை சாத்தி தாழிட்டாள். மெதுவே நடந்து, அவள் வீட்டின் திண்ணை பக்கம் வந்தாள். பசு மாடுகள் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தன. அந்த காட்சியை சற்று நேரம் பார்த்து கொண்டு இருந்த ராதையின் மனதில் ஒரு ஆசை தோன்றியது. மாடுகள் வரும் திசையை நோக்கினாள். அந்த அஞ்சு லக்ஷ மாடுகளுக்கு பின் கோபர்கள் வருவார்கள், அவர்களுக்கும் பின், கண்டிப்பாக கண்ணன் வர வேண்டும். இன்று ஏன் கண்ணனை காணும் புண்ணிய நாளாக இருக்க கூடாது? என்று நினைத்து, மெதுவே, வீட்டிற்கு வெளியே செல்ல முற்பட்டாள். அவள் தந்தை மாலை பூஜையில் இருந்தர், தாயாரோ சமையல் அறையில் வேலையாக இருந்தாள். இன்று கண்டிப்பாக கண்ணனை கண்டு விடலாம் என்று நினைத்து, குதூகலம் அடைந்தாள்.

கதவை மெதுவே திறந்து, கொலுசு ஒலிக்காமல், மெல்ல நடந்து வாசற் பக்கம் சென்ற ராதை, திடுக்கிட்டு நின்றாள். வசலில் உள்ள புளிய மரத்தின் பின் ஒரு உருவம் தென் பட்டது. தாயோ , தந்தையோ, ராதையின் மனோ நோக்கத்தை தெரிந்து கொண்டு, அவளை பிடிக்க காத்து கொண்டு இருக்கிறார்களோ என்று நினைத்து பதறினாள். அந்த சமயத்தில், பக்கத்துக்கு வீட்டில் விளக்கு ஏற்ற பட, மரத்தின் பின் ஒளிந்து இருந்த உருவம், திடுக்கிட்டு, ராதையின் வீட்டிற்கு பக்கமாக நகர, அந்த உருவம் போட்டு கொண்டு இருந்த, மஞ்சள் நிற பாவாடையை ராதை கண்டாள்.

"லலிதா!" என்று மெல்ல கூப்பிட்டாள்.

ராதையின் குரலை கேட்ட லலிதா, திடுக்கிட்டு திரும்பினாள்.

" சத்தமாக பேசாதே!" என்று ராதையை எச்சரித்தாள்.

'எனக்கும் கண்ணனை காண வேண்டும்" என்றாள் ராதை. "இன்று என்ன நிற பட்டு ஆடை உடுத்தி கொண்டு இருக்கிறான் என்று தெரியுமா? "

"மஞ்சள் நிறம் என்று கேள்வி. "

"அய்யோ! இன்னம் எத்தனை நேரம்? சீக்கிரம் கண்ணனை காண வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. அவன் காட்டு பூக்களினால் ஆன மாலையை சாத்தி கொண்டு, நடந்து வரும் அழகை கண்டு மகிழ ஆசையாக இருக்கிறது!"

"ராதா! இந்த வேளையில் வெளியே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்" என்று அழைத்த ராதையின் தாயாரின் குரலை கேட்டு, இரண்டு பெண்களும் திடுக்கிட்டு திரும்பினர்.

"லலிதாவிடம் சற்று நேரம் பேசுவதற்காக வெளியே வந்தேன்" என்று சொல்லி , ராதை சமாளிக்கப் பார்த்தாள்.

ராதையின் தாயார் வாசல் பக்கமாக சென்று கொண்டு இருக்கும் பசுக்களை நோக்கினாள். "பொய் பேசாதே!" என்று ராதையை திட்டினாள். "கண்டிப்பாக லலிதாவுடன் பேசுவது உனது நோக்கம் அல்ல. பேசுவதாக இருந்தால், இப்படி வீட்டு வாசலில் , மரத்தின் பின் ஒளிந்து கொண்டு பேசுவானேன் ? இப்படி ஒளிந்து கொண்டு, கண்ணனை பார்ப்பதை யாரவது கண்டால், என்ன நினைப்பார்கள்? உடனே உள்ளே வா. வந்து விட்டு வேலையை கவனி. எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் ஜன்னல் கதவை சாத்தாதே என்று. கதவுகளை திறந்த பின், வீட்டு வேலை செய்து முடி. லலிதா, நீயும் உன் வீட்டிற்கு திரும்பு, இல்லை என்றால் உன் தாயாரிடம் உன்னை பத்தி புகார் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்."

ராதையின் மனது மறுபடியும் கொந்தளித்தது. இன்னம் எவ்வளவு காலம் கண்ணனை பார்க்காமல் இருப்பது? எப்பொழுது தோழிகளுடன் சேர்ந்து கண்ணனுடன் யமுனை ஆற்றங்கரையில் விளையாட வழி பிறக்கிறதோ, அன்று தான் தன் வாழ்க்கையில் விடியும் நாள் என்று நினைத்து வருந்தினாள்.

மறு நாள் காலை, தாயாருடன் ராதை யமுனை ஆற்றங்கரைக்கு தண்ணீர் எடுத்து வர சென்றாள். அங்கே பெண்கள் கும்பல் கும்பலாக நின்று கொண்டு பேசி கொண்டு இருபதை கண்டார்கள்.

"இங்கே என்ன கூட்டம்?" என்று ராதையின் தாயார் வினாவினாள்.

"ஒ! நல்ல வேளையாக நீயும் வந்து விட்டாய் ," என்று மகிழ்ந்தாள் வ்ருந்தா தேவி. "நாங்கள் இங்கே கலந்து நம் தேசத்தின் சீதோஷ்ணநிலையை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம்."

"என் மனது கொதித்து கொண்டு இருப்பதை பற்றி யாருக்கு கவலை? சீதோஷ்ணநிலையை பற்றி இப்போ பேசுவானேன் ", என்று நினைத்தாள் ராதா

"சீதோஷ்ணநிலையை பற்றி என்ன கவலை?"

"நீ கவனிக்க வில்லையா? மழைக்காலம் தள்ளி போய் விட்டது. பசும் புல்லாய் தேடி கோபர்கள் மிக தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. இப்படியே மழை பெய்யாமல் இருந்தால், நம் தொழில் என்ன ஆவது?"

"அதற்காக இங்கே கலந்து பேசுவதால் என்ன லாபம்?"

"நேற்று முன் தினம் நம் பஞ்சாயத்தால் எடுத்த முடிவை பத்தி பேசி கொண்டு இருக்கிறோம். நீ ஏன் வரவில்லை?"

"உறவினரை பார்க்க, பக்கத்துக்கு கிராமத்திற்கு சென்று இருந்தேன். பஞ்சாயத்தில் என்ன நடந்தது?"

"நம் கிராமத்தில் உள்ள எல்லாக் கன்னி பெண்களும் சேர்ந்து, காத்யாயனி நோன்பு ஒரு மாத காலம் இருந்தால், நோன்பு முடிந்த உடன், கண்டிப்பாக மழை பெய்யும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பெரியோர்களின் வாக்கின் படி, எல்லா பெண்களும் நோன்பு நோற்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்ய பட்டு இருக்கிறது."

"எத்தனை பெண்கள் நோன்பு நோற்க வேண்டும்"

"கிராமத்தில் உள்ள எல்லா கன்னி பெண்களும் நோன்பு நோற்க வேண்டும். சுமார் அஞ்சு லக்ஷம் பெண்கள் இருக்கிறார்கள்."

"என்ன? அஞ்சு லக்ஷம பெண்களை எப்படி கண்காணிப்பது? சிறுமிகள், அவர்களின் தோழிகளுடன் சேர்ந்து செய்யும் அட்டகாசத்தை எப்படி கண்டிப்பது?"

கீதை தொடரும்....

45 views0 comments

Recent Posts

See All
bottom of page